சென்னை | செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்க முன்னாள் உரிமையாளர் கைது

சென்னை | செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்க முன்னாள் உரிமையாளர் கைது
Updated on
1 min read

சென்னை: செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்க முன்னாள் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சினிமா பைனான்ஷியர் போத்ரா கடந்த 2002-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் திரையரங்க உரிமையாளராக இருந்த மணி ஆகியோருக்கு ரூ.35 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் முன் தேதியிட்டு கொடுக்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்தும்போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.

இது தொடர்பாக போத்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 2015-ம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிர்வாகி முன்னாள் எம்பி அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் திரையரங்க உரிமையாளராக இருந்த மணி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இறுதியில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை கைது செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. முன்னாள் எம்பி அன்பரசு மற்றும் அவரது மனைவி ஏற்கெனவே காலமாகிவிட்டனர். இந்நிலையில், மணி கைது செய்யப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in