புதுவை பாஜக நிர்வாகி கொலையில் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்த 7 பேர்

செந்தில்குமரன்
செந்தில்குமரன்
Updated on
1 min read

திருச்சி: புதுச்சேரி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று 7 பேர் சரணடைந்தனர். புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமரன்(45).

மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் நாட்டு வெடிகுண்டை வீசியதுடன், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் செந்தில்குமரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த நித்யானந்தம்(43), கொம்பாக்கத்தைச் சேர்ந்த சிவசங்கர்(23), கோர்கார்ட் பகுதியைச் சேர்ந்த ராஜா(23), கார்த்திகேயன்(23), தனத்துமேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(25), அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ்(26), கடலூர் மாவட்டம் கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த பிரதாப்(24) ஆகிய 7 பேர் நேற்று திருச்சி ஜே.எம் 3 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை மார்ச் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in