சிவகங்கை | ஒரே நாளில் 3 வழிப்பறி சம்பவங்கள்: பெண் போலீஸ் முன்னிலையில் கணவரை வெட்டி வழிப்பறி

சிவகங்கை | ஒரே நாளில் 3 வழிப்பறி சம்பவங்கள்: பெண் போலீஸ் முன்னிலையில் கணவரை வெட்டி வழிப்பறி
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை அருகே பெண் போலீஸ் முன்னிலையில், அவரது கணவரை வெட்டி வழிப்பறி நடந்துள்ளது. ஒரே நாளில் தொடர்ந்து 3 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை அருகே வரிச்சியூரைச் சேர்ந்த மீன் வியாபாரி செக்கடியான் (38). இவர், நேற்று முன்தினம் இரவு சிவகங்கை அருகே சாமியார்பட்டி கண்மாயில் மீன் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்தார். மதுரை சாலையில் கரும்பாவூர் விலக்கு அருகே வந்தபோது, அவரை வழிமறித்த 3 பேர் வாளால் வெட்டி, அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர்.

இதேபோல், மழவராய னேந்தலைச் சேர்ந்த மோகனசுந்தரேஸ்வரன் (35) தனது மனைவியான பெண் காவலருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை சாலையில் நல்லாகுளம் அருகே வந்தார். அப்போது, அதே கும்பல் மோகனசுந்தரேஸ்வரனை வெட்டிவிட்டு ஒன்னேகால் பவுன் தங்கச் செயினை பறித்து தப்பியது.

இதைத் தொடர்ந்து, அக்கும்பல் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை விரட்டிச் சென்றது. அப்போது, அவர் கீழே விழுந்து காயமடைந்ததால், அப்பகுதியினர் அவரை மீட்க வந்தனர். இதையடுத்து, அக் கும்பல் தப்பியோடியது.

இதேபோல், திருப்பத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை தாக்கிவிட்டு, மொபைல், பணத்தை பறித்துக் கொண்டு ஒரு கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து சிவகங்கை தாலுகா பூவந்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர். தொடர் வழிப்பறி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in