

மதுரை: துணை வேந்தர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தனியார் கல்லூரி முதல்வரிடம் ரூ.1 கோடி மோசடி செய்தது தொடர்பாக ராமநாதபுரம் எஸ்பி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் தனியார் கல்லூரி முதல்வ ராகப் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு துணை வேந்தர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி சிலர் ரூ.1 கோடி கேட்டனர். நான் அவர்கள் கூறிய 3 வங்கி கணக்குகளில் ரூ.95 லட்சம் செலுத்தினேன். ஆனால், எனக்கு துணை வேந்தர் பதவி வாங்கித்தரவி்லை.
இது குறித்து கேட்டபோது, ரூ.18 லட்சத்தை திரும்ப வழங்கினர். மீதிப் பணத்தை தரவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் மனுதாரரிடம் பண மோசடி செய்தவர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி பணத்தை திரும்பக் கொடுத்து விடுவதாக எழுதிக் கொடுத்துள்ளனர். அதன் பேரில் புகார் முடிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனு தாரரின் புகார் தீவிரமானது. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்று. இத னால் வழக்கு முடிக்கப்பட்ட அறிக் கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
மனுதாரர் பண மோசடி குறித்து ராமநாதபுரம் எஸ்பியிடம் புதிதாக புகார் அளிக்கலாம். அந்தப் புகாரின் பேரில் பேரில் எஸ்பி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.