

திருச்சி: திருச்சியில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடி காட்டிய திருச்சி சிவா எம்.பி ஆதரவாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதையறிந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் சிலர் அங்கு சென்று, காவல் நிலையத்துக்குள் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து திமுக கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், பொன்னகர் பகுதி திமுக பிரதிநிதி திருப்பதி ஆகியோரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். விசாரணைக்குப் பின், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஜாமீன் கேட்டு 5 பேரும் திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்தனர். அப்போது, 5 பேரின் ஜாமீன் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.