Published : 23 Mar 2023 07:12 AM
Last Updated : 23 Mar 2023 07:12 AM

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: தென்காசியில் மத போதகர் கைது

ஸ்டான்லி குமார்

தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் மத போதகராக இருப்பவர் ஸ்டான்லி குமார் (49). இவர் மீது பெத்தநாடார்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் டிஎஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், ‘வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த எனது மகளுக்காக ஜெபிக்குமாறு மத போதகர் ஸ்டான்லி குமாரிடம் கூறினேன். அவர் எனது மகளை அழைத்து வருமாறு கூறினார். அதன்பேரில் எனது மகளை தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றேன்.

மத போதகர் கேட்டுக்கொண்டதன்பேரில் எனது மகளை தேவாலயத்தில் 3 நாட்கள் தங்குவதற்கு அனுமதித்தேன். ஆனால் எனது மகளுக்கு மத போதகர் பாலியல் தொந்தரவு அளித்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எனது மூத்த மகளை அழைத்து மன்னிப்பு கேட்டார். போலீஸில் புகார் அளிக்க வேண்டாம் என்றும், புகார் அளித்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மத போதகர் கூறியதால் புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில், மற்றொரு பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து, அதைக் காட்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். அது தொடர்பாக அந்த பெண் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வைத்து மிரட்டி வருகிறார். இதனால் மத போதகர் மீது புகார் அளிக்க பலர் அஞ்சுகின்றனர். பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வரும் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பாவூர்சத்திரம் போலீஸாருக்கு டிஎஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி, மத போதகர் ஸ்டான்லி குமாரை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x