நாகர்கோவில் | ஆபாச வீடியோ சர்ச்சையில் கைதான பாதிரியாரின் செல்போனுடன் இளைஞர் மாயம்

பெனடிக்ட் ஆன்றோ
பெனடிக்ட் ஆன்றோ
Updated on
1 min read

நாகர்கோவில்: பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையில் சிக்கிய பாதிரியாரின் செல்போனுடன் தலைமறைவான இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள குடயால்விளையைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). அழகியமண்டபத்தை அடுத்த பினாங்காலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். இவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியானது.

75-க்கும் மேற்பட்ட பெண்கள்: நர்சிங் மாணவி ஒருவர் தந்த புகாரின் பேரில் பாதிரியாரின் லேப்டாப்பை சைபர் கிரைம் போலீஸார் பறிமுதல் செய்தனர். பாதிரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் சைபர் கிரைம் போலீஸில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். சுமார் 75-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பாதிரியார் இருக்கும் வீடியோக்கள் அவரது லேப்டாப்பில் இருந்துள்ளது.

தாய், மகள், மருமகள்: பாதிரியார் என மரியாதை நிமித்தமாக பழகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகள் என 3 பேரிடமும் பாதிரியார் வீடியோ சேட்டிங்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. சாட்சியங்களை கலைப்பதற்கான முயற்சிகள் நடக்கலாம் என்பதால், 10 நாட்களுக்குள் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய சைபர் கிரைம் போலீஸார் முயற்சி எடுத்துள்ளனர்.

ஏற்கெனவே பாதிரியாரின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு தகவல்களை பரவவிட்டதாக பாதிரியார் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில், மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது நண்பரான மற்றொரு இளைஞர் பாதிரியாரின் செல்போனுடன் தலைமறைவாகிவிட்டார். அவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவரை கைது செய்த பின்னர், செல்போனில் உள்ள ஆதாரங்களை திரட்டி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in