Last Updated : 21 Mar, 2023 07:45 PM

1  

Published : 21 Mar 2023 07:45 PM
Last Updated : 21 Mar 2023 07:45 PM

கிருஷ்ணகிரியில் பரபரப்பு: மகளை காதல் திருமணம் செய்த மருமகனை நடுரோட்டில் கொலை செய்தவர் நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மருமகனை வழிமறித்து மாமனார் மற்றும் உறவினர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு: கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழிமறித்து கொலை: இதனைமீறி ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதில் சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் அணை பிரிவு மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலை பக்கமாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் ஜெகனை கீழே தள்ளி விட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர். இதில் ஜெகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

உறவினர்கள் சாலை மறியல்: அவரை கொலை செய்ததும் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரும் 2 இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஜெகனின் உறவினர்கள் மற்றும் பாமகவினர் ஜெகனின் உடலை சாலையில் இருந்து எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, எஸ்பி சரோஜ்குமார் தாகூர், டிஎஸ்பி தமிழரசி மற்றும் போலீஸார், கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை: தொடர்ந்து ஜெகனின் உடலை மீட்ட போலீசார் , உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து. மருமகனை மாமனாரை தனது உறவினர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலானது... - காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன், பெண்ணின் தந்தையால் ஆணவ கொலை செய்யப்பட்டார். தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கொலையை அந்த பகுதியில் இருந்த சிலர் தங்களின் செல்போன்களில் தூரமாக இருந்தவாறு படம்பிடித்தனர். ஜெகனின் கால்களை ஒருவர் பிடித்துக் கொள்ள, 2 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. பல்வேறு வாட்ஸ அப் குழுக்களிலும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பெண்ணின் தந்தை சரண்: தனது மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மருமகனை பட்டப்பகலில் வெட்டிக் கொன்ற பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரியில் உள்ள கூடுதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x