

திருச்சி: திருச்சியில் அரியமங்கலம் மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலரை கொடூரமாகத் தாக்கி வழிப்பறி செய்த 2 சிறார் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள டி.கே.புதூரைச் சேர்ந்தவர் வசந்தன் (44). உணவு பாதுகாப்புத் துறையில் திருச்சி அரியமங்கலம் மண்டல அலுவலராக பணிபுரிந்து வரும் இவர், தற்காலிகமாக பொன்னகர் பகுதியில் வசித்து வருகிறார்.
பணி நிமித்தமாக சென்னைக்குச் சென்றுவிட்டு மார்ச் 15-ம் தேதி மத்திய பேருந்து நிலையம் வந்த இவர், அங்கிருந்து மருத்துவக் கல்லூரி சாலை வழியாக பொன்னகருக்கு நடந்து சென்றார்.
அப்போது வழிமறித்த 3 பேர் செங்கல் கல்லால் அவரது முகத்தில் கொடூரமாகத் தாக்கி நிலைகுலையச் செய்து, அவரது செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அமர்வு நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா உத்தரவின்பேரில், அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில், பாலக்கரை காஜாப்பேட்டை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சூர்யா(21) என்பவர் தனது நண்பர்களான தென்னூர், காஜாப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய இரு இளம் சிறாருடன் சேர்ந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சூர்யா உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்கள் மீது ஏற்கெனவே வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தனியாகச் செல்லக்கூடியவர்களை குறிவைத்து தாக்கி தொடர்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.