

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்தபாத்திமா நகரைச் சேர்ந்தவர்பெனடிக்ட் ஆன்ட்ரோ(29).அழகிய மண்டபம் அருகே பிலாங்கலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பொறுப்பு வகிக்கிறார். இவர் பெண்கள் சிலருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் உரையாடல்கள் சமூக வலைதளங்களில் பரவின.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகாரில், தேவாலயம் சென்றபோது பெனடிக்ட் ஆன்ட்ரோ பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரில், “பாதிரியாருடன் தான் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதை நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களிடம் ஆபாசமாகவும், அவதூறாகவும் நடந்து கொள்ளுதல், சமூக வலைதளங்களை தவறான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கன்னியாகுமரி சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புகார் தெரிவிக்கலாம்... பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தைரியமாகப் புகார் அளிக்கலாம், ரகசியம் காக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.