Published : 17 Mar 2023 07:33 AM
Last Updated : 17 Mar 2023 07:33 AM

சென்னை | 5 ஆண்டுகளாக வாடகை தராததால் ஆத்திரம்: செல்போன் கோபுரத்தை பிரித்து விற்ற இட உரிமையாளர்கள்

சென்னை: ஐந்து ஆண்டுகளாக வாடகை தராததால், இடத்தின் உரிமையாளர்கள் செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரத்தை பிரித்து இரும்பு கடையில் விற்று பணமாக்கி உள்ளனர். இதுகுறித்து செல்போன் நிறுவனத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை, கோயம்பேடு வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர்கள் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் 2006-ம் ஆண்டு முதல், மாத வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் செல்போன் கோபுரம் (டவர்) அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக செல்போன் நிறுவனத்திலிருந்து வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவரை அண்மையில் பார்த்துள்ளனர். அப்போது, அங்கிருந்த டவர் காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த செல்போன் நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.8.60 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் காணவில்லை என அதில் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, போலீஸார் வீட்டு உரிமையாளர்களிடம்விசாரித்தனர்.

இதில்,கடந்த சில ஆண்டுகளாக செல்போன் நிறுவனம் வாடகை பாக்கி தராமல் இருந்துள்ளனர். மேலும், டவர் பராமரிப்பின்றி துருப்பிடித்து, கீழே விழும் நிலையில் இருந்ததால் அதனைக் கழற்றி பழைய இரும்பு கடையில் போட்டு, பணமாக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நிலுவையில் உள்ள வாடகை பாக்கி பணத்தை கொடுத்து விட்டால் மொபைல் போன் டவரை கொடுத்து விடுவதாக இடத்தின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் இருதரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x