தூத்துக்குடி | சாலை தடுப்பு சுவரை உடைத்து போராட்டம்: பாஜக நிர்வாகி கைது

தூத்துக்குடி | சாலை தடுப்பு சுவரை உடைத்து போராட்டம்: பாஜக நிர்வாகி கைது
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி விவிடி பிரதான சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சாலையாக தரம் உயர்த்தப்பட்டு நவீன சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவே சிமென்ட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் டூவிபுரம் 1-வது தெருவில் இருந்து அண்ணா நகர் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வழியில்லை. எனவே, அந்த பகுதியில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்புச் சுவரை உடைத்து போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மேற்கு மண்டல அரசு தொடர்பு பிரிவு துணைத் தலைவர் ஆர்.காசிலிங்கம் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் மதியம் காசிலிங்கம் மற்றும் அவரது உறவினர் பெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து கடப்பாறை மற்றும் சம்மட்டியால் சாலை தடுப்புச் சுவரை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.சேகர் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்து அவர்களை தடுத்து எச்சரித்து அனுப்பினர்.

மேலும், இது தொடர்பாக உதவி ஆணையர் சேகர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காசிலிங்கம் மற்றும் பெருமாள் ஆகிய இருவர் மீதும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி காசிலிங்கத்தை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in