Published : 08 Mar 2023 07:51 AM
Last Updated : 08 Mar 2023 07:51 AM

திருப்பூர் | சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக பிஹார், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது

மனோஜ் யாதவ்

திருப்பூர் / மறைமலைநகர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்பப்பட்டது. இதையடுத்து பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் சார்பில் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு தமிழகம் வந்துகடந்த 3 நாட்களாக தொழிலாளர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையே, வதந்தி தொடர்பாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவின் பேரில்சைபர் கிரைம் ஆய்வாளர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சமூக வலைதளங்களைக் கண்காணித்து வந்தனர். முகநூலில் சிபிஎல் மீடியா என்றகணக்கில் ரூபேஷ்குமார் என்பவர் போலியான வீடியோவை பரப்பி யது கண்டறியப்பட்டது.

இதையடுத்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்தனர். ரூபேஷ்குமார்(23) பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரன்மாவட்டம் ஜெயின்பூர் அருகே பன்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் என்பதுவிசாரணையில் தெரியவந்தது.

ரூபேஷ்குமாரை தெலங்கானா மாநிலம் வனபார்த்தி மாவட்டம் சின்னகுண்டப்பள்ளி கிராமத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 3-ல்ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

திருப்பூர் மாவட்ட போலீஸார் கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தில் 3 வழக்குகள் உள்ளன. வதந்திபரப்பிய ஒரு யூ-டியூப் தொடர்பாக, மாவட்ட போலீஸார் சென்னை சென்றுள்ளனர்” என்றனர்.

ஜார்க்கண்ட் இளைஞர் கைது: இதற்கிடையே போலி வீடியோ வெளியிட்ட ஜார்க்கண்டைச் சேர்ந்தஇளைஞரை மறைமலை நகர் போலீஸார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தங்கி கட்டிட பணி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சிலர் அடித்து உதைப்பது போல் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதன்தொடர்ச்சியாக இந்த போலி வீடியோவை பதிவேற்றம் செய்தது யார் என்பது குறித்து மறைமலை நகர் போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி தனியார் கல்லூரி வாளகத்தில் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வந்தஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் இந்த வதந்தி வீடியோவை பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துமனோஜ் யாதவ்வை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதற்கு அனுஜ்குமார், சூரஜ் திவாரி, சந்தோஷ் சவுத்ரி, சந்தன் சவுத்ரி, சஞ்சய் சர்மா,சிந்து ராம் ஆகிய 6 பேர் உதவியதும் தெரியவந்தது. அவர்கள் 6 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x