கரூர் | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கரூர் | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
Updated on
1 min read

கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள மலைக்கோவிலூர் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (40). கூலித் தொழிலாளி. திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் மலைக்கோவிலூர் அருகேயுள்ள குடகனாறு ஆற்றுப்பாலத்தின் கீழ் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வாயை பொத்தி, கையை கட்டி, தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

இது குறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவசுப்ரமணியனை கைது செய்தனர். கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி ஏ.நசீமா பானு இன்று (மார்ச் 7ம் தேதி) அளித்த தீர்ப்பில், சிறுமியை தடுத்ததற்காக ஒராண்டு சிறைத் தண்டனையும், கடத்தி சென்றதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும், போக்சோவின் கீழ் ஆயுள் கால சிறைத் தண்டனையும், மேலும் ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கி அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in