சென்னை | சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்களுக்கு இரட்டை ஆயுள்

சென்னை | சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்களுக்கு இரட்டை ஆயுள்
Updated on
1 min read

சென்னை: காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியைக் கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்களுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2014-ல் விபச்சார தடுப்பு வழக்கில் மீட்கப்பட்ட 14 வயது சிறுமியை, சென்னை பெரவள்ளூரில் உள்ள தனியார் காப்பகத்தில் போலீஸார் சேர்த்தனர். அப்போது, மற்றொரு விபச்சார வழக்கில் சிக்கிய பாத்திமா மூசா(28) என்ற பெண்ணும் அந்த காப்பகத்தில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், சிறுமிக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அந்தக் காப்பகத்தில் இருந்து சிறுமியைக் கடத்திய மூசா, தனது தாயார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பல மாதங்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக காப்பக நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்தனர். சென்னை ஆள்கடத்தல் தடுப்புக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த சிறுமியை மீட்டனர்.

இந்த வழக்கில் பாத்திமா மூசா(28), மாரியம்மாள் (49), கேளம்பாக்கம் சத்யா(40), தூத்துக்குடி தமிழ்செல்வி (35) மற்றும் புரோக்கர்கள் செம்மஞ்சேரி சதீஷ்குமார் (26), கோவளம் தனியார் விடுதி மேலாளர் செந்தில்குமார் (30), ரூம் பாய் மகேந்திரன் (32) ஆகியோரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சுமத்தப்பட்ட மாரியம்மாள், சத்யா, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தார். பாத்திமா மூசாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், செந்தில்குமார், மகேந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1.41 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in