பாலியல் வன்கொடுமை வழக்கு | குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் விதித்து ஐகோர்ட் தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கு | குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் விதித்து ஐகோர்ட் தீர்ப்பு
Updated on
1 min read

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், குற்றவாளியின் குழந்தைகளின் கல்வியைத் தொடரும் நடவடிக்கைகள் குறித்து சமூக நலத்துறை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகில் வசித்தவர், தனது 8 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவைச் சேர்ந்த பெண் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட வரை விடுதலை செய்து கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10.50 லட்சம் இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், குற்றவாளியின் குடும்ப பின்னணி மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த குழந்தைகள் கல்வியைத் தொடர்வதற்கும், வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் அரசு உதவி வழங்குவது குறித்து சமூக நலத்துறை பரிசீலிக்க வேண்டும்" என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in