சென்னை | பான் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி அமெரிக்க பொறியாளரிடம் ரூ.10 லட்சம் திருட்டு

சென்னை | பான் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி அமெரிக்க பொறியாளரிடம் ரூ.10 லட்சம் திருட்டு
Updated on
1 min read

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பத்ரி நாராயணன். அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தனது தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக கடந்த டிசம்பரில் குடும்பத்துடன் சென்னை வந்தார்.

இந்நிலையில், இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்றுவந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ``உங்களது பான் கார்டுகாலாவதியாகிவிட்டது. அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நிரந்தரமாக காலாவதியாகிவிடும். இதைத் தவிர்க்க உங்கள் செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்க்கை திறந்து கேட்கும் விவரங்களை பதிவிடவும்'' என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

அதை நம்பி, தனது செல்போனுக்கு வந்த லிங்கை பத்ரி நாராயணன் திறந்து, கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 3 தவணைகளாக ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in