

விருதுநகர்: விருதுநகர் அருகே இரு மகள்களையும் கொலை செய்ய திட்டமிட்டு கேக்கில் பூச்சிக் கொல்லி மருந்தை தடவி கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தை மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள சின்னப்போராளி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிகுமார் (37). திருச்சுழியில் இரும்புக் கம்பிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு அக்சயா (10), அகல்யா (7) என இரு பெண் குழந்தைகள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முனீஸ்வரி உயிரிழந்தார்.
இதனால் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டு வந்த முரளிகுமார் மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன் தினம் இரவு விருதுநகர் பஜாரில் கேக் வாங்கி வந்து அதில் பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை தடவி மகள்களுக்கு கொடுத்தார்.
பின்னர் அந்த கேக்கை தானும் சாப்பிட்டார். வீட்டில் மூவரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதைப் பார்த்த அருகிலிருந்தோர் மூவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு மகள்களையும் கொல்லத் திட்டமிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற முரளிகுமார் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.