தி.மலையில் 4 ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் நூலிழையில் தப்பிய முக்கிய குற்றவாளி: கே.ஜி.எப்-ல் தனிப்படை முகாம்

தி.மலையில் 4 ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் நூலிழையில் தப்பிய முக்கிய குற்றவாளி: கே.ஜி.எப்-ல் தனிப்படை முகாம்
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நூலிழையில் தப்பினார். கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அந்த நபரை பிடிக்க கே.ஜி.எப்-ல் வேலூர் எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் முகாமிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 1.19 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.20 மணிக்குள் 4 ஏ.டி.எம் மையங்களில் காஸ் வெல்டிங் மூலம் இயந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. டாடா சுமோ காரில் வந்த முகமூடி கொள்ளை கும்பலை பிடிக்க வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் 5 காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஹரியானா மாநிலம் மேவாத் பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளை கும்பலாக இருக்கலாம் என காவல் துறையினர் கருதி வருகின்றனர். தனிப்படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் சுங்கச்சாவடி வழியாக செல்லாமல் போளூரில் இருந்து தேவிகாபுரம்,

ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை, சித்தூர், பலமநேரி வழியாக கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், கொள்ளையர்களை பிடிக்க டிஎஸ்பிக்கள் தலைமையில் சென்ற தனிப்படையினர் ஹைதராபாத், நாக்பூர், அஹ்மதாபாத், ஹரியானாவில் துப்பாக்கிகளுடன் முகாமிட்டுள்ளனர்.

கே.ஜி.எப்-ல் முகாம்: ஏ.டி.எம் கொள்ளை கும்பல் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அங்கிருந்து காரில் புறப்பட்ட கும்பல் சுங்கச்சாவடி வழியை பயன்படுத்தாமல் திருவண்ணாமலைக்கு வந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றவிட்டு மீண்டும் அதே வழியில் பணத்துடன் தப்பியது தெரியவந்தது.

அவர்கள் தங்கியிருந்த லாட்ஜை கண்டுபிடித்த தனிப்படையினர் விசாரித்தபோது ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தான் கொள்ளை கும்பல் கேஜிஎப்-ல் புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. அவர்களை யார்? தங்க வைத்தது என்பது குறித்து அருகில் இருந்த தேநீர் கடையில் விசாரித்தபோது உள்ளூரைச் சேர்ந்த ஒருவரின் அடையாளம் கிடைத்துள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அந்த நபரை சுற்றிவளைக்க முயன்றபோது சுதாரித்துக்கொண்டவர் தனது செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அவரின் உறவினர்களை பிடித்து தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். அவரை பிடித்தால் மட்டுமே கொள்ளையர்கள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த முழு விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.

ஏறக்குறைய குற்றவாளிளை நெருங்கிவிட்டதால் நூலிழையில் தப்பிய அந்த நபரை பிடிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கே.ஜி.எப்-ல் முகாமிட்டுள்ளார். மேலும், அந்த நபரின் குற்ற வழக்கு பின்னணி குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in