தென்காசி வழக்கில் திருப்பம் | கடத்தப்பட்ட பெண் மீது வழக்கு பதிய வாய்ப்பு: உயர் நீதிமன்றத்தில் தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மதுரை: தென்காசியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தென்காசி இலஞ்சி தென்றல் நகரைச் சேர்ந்தவர் நவீன் பட்டேல். இவர் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது மகள் குருத்திகா. இவரும் தென்காசி கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜன.25-ல் வினித்தும், குருத்திகாவும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்த போது நவீன் பட்டேலும், அவரது ஆட்களும் வினித்தை தாக்கி விட்டு குருத்திகாவை கடத்திச் சென்றதாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நவீன் பட்டேல், அவர் மனைவி தர்மிஸ்தாபட்டேல் உள்பட 12 பேர் மீது குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தனர். நவீன்பட்டேல், தர்மிஸ்தாபட்டேல், ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், விஷால், கீர்த்திபட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்கள் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''குருத்திகா பட்டேல் அவரது உறவினர்களால் கடத்தப்படும் சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளன. அவரை கேரளா வழியாக 5 கார்களில் அடுத்தடுத்து மாற்றம் செய்து குஜராத்திற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

குருத்திகா பட்டேல் மீதும் வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது. குருத்திகாவை மீட்கக் கோரிய ஆள்கொணர்வு மனு உயர் நீதிமன்ற அமர்வில் நிலுவையில் உள்ளது. இதனால் மனுதாரர்களுக்கு ஜாமீன், முன்ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றார். இதையடுத்து விசாரணையை பிப்.20-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in