Published : 13 Feb 2023 06:32 AM
Last Updated : 13 Feb 2023 06:32 AM

தி.மலை | ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.73 லட்சம் கொள்ளை: வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை; 8 தனிப்படை அமைப்பு

திருவண்ணாமலையில் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டு, காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட வடக்கு மண்டல ஐஜி கண்ணன்.

தி.மலை: திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.73 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற வட மாநிலக் கொள்ளையர்களைப் பிடிக்க 8தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10-வது வீதி, தேனிமலை, போளூர் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் செல்லும் பாதை ஆகிய 3 இடங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையங்கள் உள்ளன. அதேபோல, கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.

இந்நிலையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் 3 ஏடிஎம் மையங்களில் இருந்து நேற்று காலை புகை வெளியேறியதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல, கலசப்பாக்கம் ஏடிஎம் மையமும் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 4 ஏடிஎம் மையங்களுக்கும் போலீஸார் சென்று பார்வையிட்டனர். அப்போது, காஸ்வெல்டிங் மூலம் அனைத்து ஏடிஎம்இயந்திரங்களைப் பெயர்த்து, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், ஏடிஎம் இயந்திரங்களை தீயிட்டுக் கொளுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஏடிஎம் இயந்திரங்களில் இருந்த பணம் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதில், மாரியம்மன் கோயில்தெருவில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.19.50 லட்சம், தேனிமலை ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.32 லட்சம், போளூர் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.19 லட்சம், கலசப்பாக்கம் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.2.40 லட்சம் என மொத்தம் ரூ.72.90 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.

ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. திருவண்ணாமலை-வேலூர் வழிதடத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில், கொள்ளை நடைபெற்ற நேரத்தில், ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனம், வேலூருக்கு அதிவேகமாகச் சென்றது தெரியவந்தது. மேலும், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேனி மலை பகுதியில் உடைக்கப்பட்ட
ஏடிஎம் இயந்திரம்.

இந்நிலையில், கொள்ளை நடைபெற்ற ஏடிஎம் மையங்களை வடக்குமண்டல ஐஜி கண்ணன், வேலூர் டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல்கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), ராஜேஷ் கண்ணா (வேலூர்), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கிரண் ஸ்ருதி (ராணிப்பேட்டை) ஆகியோர் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க டிஐஜி முத்துசாமி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை தொடர்பாகபோளூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலை காவல் நிலையங்களில் தனித்தனியே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறும்போது, “காஸ் வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கிடைத்துள்ள தடயத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி. தலைமையிலான தனிப்படையினர் வெளி மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரம் அமைப்பு குறித்து நன்றாகத் தெரிந்த மெக்கானிக்கும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம். இரவு நேரத்தில் பாதுகாப்புப் பணியை சரியாக மேற்கொள்ளாத போலீஸார் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, மஹாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திர பிரதேச மாநிலங்களிலும் கொள்ளை நடைபெற்றுள்ளது. அம்மாநில போலீஸாருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களைக் கைது செய்வோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x