

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சரவணன்(36). இவர் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவர், தனது வீட்டிலிருந்த 100பவுன் நகையைக் காணவில்லைஎன நேற்று காலை எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஏற்கெனவே, பெரம்பூர் நகைக் கடையில் அதிக அளவு நகைகள் திருடப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சம்பவமா என போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
எனவே, உடனடியாக சரவணன் வீட்டுக்குச் சென்று போலீஸார் ஆய்வு செய்தனர். கூடவே தடயவியல் நிபுணர்களும் சென்றனர். போலீஸாரின் ஆய்வில் திருடப்பட்டதாகக் கூறப்பட்ட நகை வீட்டின்ஒரு பகுதியில் பாதுகாப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நகையை சரவணனிடம் ஒப்படைத்த போலீஸார் அதுகுறித்து விசாரித்தனர். அப்போது போலீஸாரிடம் சரவணன் கூறியதாவது, ``100 பவுன் நகைகள் என்பதால் பாதுகாப்பு கருதி அவ்வப்போது நகைகளை வீட்டுக்குள்ளேயே மாற்றி மாற்றி மறைத்து வைப்பேன்.அப்படி, நகையை வேறு இடத்தில்மாற்றி வைத்தது மறந்து போய்விட்டது. நான் வைத்ததாக நினைத்த இடத்தில் நகைகள் இல்லாததால், யாராவது திருடியிருப்பார்களே என நினைத்து பதற்றத்தில் புகார் அளித்துவிட்டேன்'' என்றார்.