

விழுப்புரம்: பெண் எஸ்பி ஒருவர் முன்னாள் சிறப்பு டிஜிபி மீது அளித்த பாலியல் வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 18 மாதங்களாக நடைபெற்று வரும் இவ்வழக்கு, இதுவரையில் 107 முறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர், அப்போது தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் கூறியிருந்தார். புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் இவ்வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், அவர்கள் இருவர் மீதும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக இவ்வழக்கு விசாரணையானது நடைபெற்று வருகிறது.நேற்றுவழக்கு விசாரணைக்கு வந்தபோது விசாரணை அலுலவரானசிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி மற்றும் சைபர் க்ரைம் கூடுதல் துணை ஆணையர் ஷாஜிதா ஆகியோர் ஆஜராகி நடுவர் புஷ்பராணி முன்னிலையில் சாட்சியம் அளித்தனர்.
வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் ஆஜராகவில்லை.
இதுவரை சுமார் 109 முறை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, இதுவரை தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர், முன்னாள் உள்துறை செயலாளர், சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் நடுவர் விசாரணை நடத்தியுள்ளத்தோடு, அந்த சாட்சியங்களிடம் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி தரப்பு வழக்கறி ஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
தற்போது சாட்சியங்களிடம் விசாரணை, குறுக்கு விசாரணை கள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், வழக்கு விசாரணை அலுவலர்களான சிபிசிஐடி போலீஸாரிடம் நடுவர் புஷ்பராணி விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் ஒரு சிலரிடம் மட்டுமே இன்னும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அரசு தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை முடிந்து, தற்போது விசாரணை அலுவலர்களான சிபிசிஐடி போலீஸாரிடம் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.