Published : 09 Feb 2023 02:16 PM
Last Updated : 09 Feb 2023 02:16 PM

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் எம்.மாத்யூஸ் ஜாலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, சென்னை விமான நிலைய சுங்கத்துறை பயணிகளை சோதனை செய்தனர். அப்போது, பிப்.8-ம் தேதி மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, நான்கு 24 கேரட் சுத்த தஙகக்கட்டிகளை அவர் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

2200 கிராம் எடை கொண்ட பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.1.13 கோடி ஆகும். இதையடுத்து சட்ட விரோதமாக தங்கம் கடத்திவந்த அந்த நபரை கைது செய்த சுங்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைத்தனர்.

இதேபோல், துபாயிலிருந்து சென்னை வந்த இந்தியர் ஒருவரிடம் நடத்திய சோதனையில், அவரது டிராலி பையில் மறைத்து ரூ.19.65 லட்சம் மதிப்பிலான 383 கிராம் 24 கேரட் சுத்த தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், தோஹாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த மற்றொரு இந்திய பயணியிடம் நடத்திய சோதனையில், அந்த பயணியின் டிராலி பேக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.70.28 லட்சம் மதிப்பிலான 1370 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பயணி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x