சென்னை | கஞ்சா கடத்திய இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னை | கஞ்சா கடத்திய இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை
Updated on
1 min read

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், கடந்த 2020 நவ.26-ம் தேதி சென்னை மாதவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தில் 8 மூட்டைகளில் 160 கிலோ கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரியை சேர்ந்த ரங்கநாதன் (52) , வேலூரை சேர்ந்த செல்வம் (53) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பாக நடந்து வந்தது. போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1.70 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in