சென்னை | முதியவரிடம் ரூ.45 லட்சம் பணம் கையாடல்

சென்னை | முதியவரிடம் ரூ.45 லட்சம் பணம் கையாடல்
Updated on
1 min read

சென்னை: சென்னை கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2021 மே மாதம் ரூ.45 லட்சம் நிரந்தர வைப்பு தொகையாக வைக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியிலிருந்த வங்கி உதவி மேலாளர் அப்சனா ஹரிகரன் (45) என்பவர் முதியவரிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை கொடுத்துள்ளார்.

பின்னர், எந்த தகவல் என்றாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்ணை அந்த முதியவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முதியவர் வங்கி உதவி மேலாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் எந்த பதிலும் அளிக்கவில்லை.

கடந்த ஆண்டே ராஜினாமா: இதனால் சந்தேகம் அடைந்த முதியவர் கடந்த மாதம் 24-ம் தேதி வங்கிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அங்கிருந்த வங்கி மேலாளர் முரளி என்பவரிடம் இது குறித்து கேட்டபோது உதவி மேலாளர் அப்சனா ஹரிகரன் கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரி மாதம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றதாக தெரிவித்தார்.

மேலும் முதியவர் வங்கி கணக்கில் ரூ.45 லட்சத்துக்கான எந்த நிரந்தர வைப்பும் வைக்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அப்போதைய வங்கி உதவி மேலாளர் அப்சனா ஹரிகரன் வங்கிக் கணக்கை சரி பார்த்தபோது அவரது வங்கிக் கணக்கில் ரூ.45 லட்சம் செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதிகாரிக்கு வலைவீச்சு: அதிர்ச்சி அடைந்த மேலாளர் இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முன்னாள் வங்கி உதவி மேலாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in