Published : 31 Jan 2023 03:25 PM
Last Updated : 31 Jan 2023 03:25 PM

சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு போக்சோவில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை -  கரூர் நீதிமன்றம்

போக்சோவில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்த் என்கிற அறிவானந்தன்

கரூர்: கரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோவில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், சிறுவனுக்கு இழப்பீடாக ரூ.1.50 லட்சத்தை அரசு வழங்கவும் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் என்கிற அறிவானந்தன் (29). இவர் அவர் வீட்டருகே பாட்டி வீட்டில் தங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 27 இரவு பேனா, பென்சில் வாங்கி வந்தப்போது சிறுவனிடம் ஆனந்த், ''நான் பேனா, பென்சில் வச்சிருக்கேன் நான் தரேன் வா'' எனக் கூறி வீட்டருகே இருந்த பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பள்ளி கேட் மூடியிருந்ததால் சிறுவனை சுற்றுச்சுவரில் ஏற்றிவிட்டு, ஆனந்த சுவர் ஏறி, இறங்கி சிறுவனை இறக்கிவிட்டு உள்ளே அழைத்து சென்று சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாட்டியிடம் சிறுவன் தெரிவித்ததை அடுத்து கரூரில் வசிக்கும் சிறுவனின் தாயிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கடத்தல், போக்சோ, கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த ஆனந்தை கைது செய்தனர்.

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் நீதிபதி ஏ.நசீமாபானு இன்று (ஜன.31 தேதி) அளித்த தீர்ப்பில், சிறுவனை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதம் அதனை கட்டத்தவறினால் மேலும் ஒராண்டு சிறைத் தண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் அதனை கட்டத்தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் அதனை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக ரூ.1.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x