Published : 30 Jan 2023 07:29 PM
Last Updated : 30 Jan 2023 07:29 PM

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை | பிஹார் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிஹாரில் இருந்து வேலை தேடி, மகளுடன் சென்னை வந்த தாய், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தனர். துக்க நிகழ்வுக்காக பிஹார் செல்ல வேண்டியிருந்ததால், பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளை, பிஹாரைச் சேர்ந்த தனக்கு தெரிந்தவர் ஒருவர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

இந்த வீட்டின் பாதுகாவலராக இருந்த பிஹாரைச் சேர்ந்த ராகுல் குமார் என்பவர், மாணவி குளிக்கும் போது மறைந்திருந்து புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அந்தப் புகைப்படத்தைக் காட்டி மாணவியிடம் இருந்த பணம் நகைகளை பறித்துள்ளார். மேலும், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பிஹாரில் இருந்து ஊர் திரும்பிய தாயிடம் மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் நடந்தது வந்தது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராகுல் குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக்கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழ்நாடு அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x