உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர்கள் இருவர் கைது

உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர்கள் இருவர் கைது
Updated on
1 min read

உதகை: உதகை அருகே தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகள், அப்பகுதியிலுள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், வட மாநில இளைஞர்கள் இருவர் நேற்று முன்தினம் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டதால் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து, இளைஞர்கள் இருவரும் தப்பி விட்டனர்.

இது குறித்து சிறுமியின் தந்தை உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் கண்மணி தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராணா ஓரான் (30), பாபுலான் ஓரான் (30) ஆகியோர், சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது தெரியவந்தது.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, உதகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் அங்குள்ள எஸ்டேட்டில் கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்ததும், வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in