தண்ணீர் எடுப்பதில் தகராறு: மத்தூர் அருகே பெண் கொலை

தண்ணீர் எடுப்பதில் தகராறு: மத்தூர் அருகே பெண் கொலை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் கொலை செய்யப்பட்டார்.

போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் அருகே குள்ளம்பட்டி சந்தம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்த சாமியின் மனைவி மாதம்மாள் (50). இவருக்கும் அவரது கணவரின் சகோதரர் சரவணனுக்கும் இடையே பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், பொது கிணற்றுக்கான மின் மோட்டாரின் பியூஸ் கெரியரை மாதம்மாள் எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சரவணன், அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் மாதம்மாளிடம் நேற்று முன்தினம் தகராறு செய்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாலை6.30 மணியளவில் செந்தாமரையின் சகோதரரான ரமேஷ் (35) மாதம்மாளிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த ரமேஷ், இரும்பு கம்பியால் மாதம்மாளை தாக்கினார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மத்தூர் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in