Published : 25 Jan 2023 04:07 AM
Last Updated : 25 Jan 2023 04:07 AM

கிருஷ்ணகிரிக்கு காரில் அழைத்துச் சென்று தருமபுரி வழக்கறிஞர் கொலை; உறவினர்கள் மறியல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்ட தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் கொலை செய்யப் பட்டார். கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி வழக்கறிஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (44). இவர் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நீதிமன்றத்திலிருந்தபோது அங்கு வந்த 2 பேர், “கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல்நிலையத்தில் குட்கா வழக்கில்தங்களது வாகனம் பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனத்தை மீட்டுத்தர வேண்டும்” என கேட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களுடன் சிவக்குமார் மற்றும் அவரது ஜுனியர் வழக்கறிஞர்கள் அருள், கோகுல் கண்ணன் ஆகியோர் கிருஷ்ணகிரிக்கு காரில் சென்றனர். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே கார் சென்றபோது, சில ஆவணங்களை குருபரப்பள்ளிக்கு சென்று எடுத்து வர வேண்டும் எனக்கூறி சிவக்குமாரை மட்டும் காரில் அழைத்துச் சென்றனர்.

சுங்கச்சாவடி அருகே காத்திருந்த அருள் மற்றும் கோகுல் கண்ணன் ஆகியோர் நீண்ட நேரமாகியும் சிவக்குமார் மற்றும் அவரை அழைத்துச் சென்றவர்கள் வராததால், செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, தருமபுரி வழக்கறிஞர்கள் மற்றும் சிவக்குமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே, ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி எதிரே நின்ற காரில் சிவக்குமார் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை ரோந்துப் போலீஸார் கண்டறிந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குருபரப்பள்ளி போலீஸார் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும், சம்பவ இடத்தில் எஸ்பி சரோஜ்குமார் தாகூர் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக சிவக்குமாரின் மனைவி வனிதா அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சிவக்குமாரை கொலை செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்பி சரோஜ்குமார் தாகூர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்று தெரிவித்தார். இதையேற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால், இச்சாலையில் 30 நிமிடம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி வழக்கறிஞர்கள்நீதிமன்றம் புறக்கணிப்பு: தருமபுரி வழக்கறிஞர் சங்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், ‘தருமபுரி வழக்கறிஞர் சங்க உறுப்பினரான சிவக்குமார், கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தருமபுரி வழக்கறிஞர் சங்கம் கண்டனம் தெரிவிப்பதுடன் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்துகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் 27-ம் தேதி வரை நீதிமன்ற பணிகளில் தருமபுரி வழக்கறிஞர் சங்கம் ஈடுபடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் அடிப்படையில் நேற்று தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் ஈடுபடவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x