

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே ஏரியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி அருகே ஓ.என்.கொத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சாக்கு மூட்டை ஒன்று நேற்று மிதந்தது. மேலும், அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக கிராம மக்கள் குடிப்பள்ளி காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், ஏரியில் இருந்த சாக்கு மூட்டையை மீட்டு, பிரித்து பார்த்தனர்.
உள்ளே 25 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் சடலம் இருந்தது. விசாரணையில், இளம் பெண்ணை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசி சென்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், வேப்பனப்பள்ளி பகுதியில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.