

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தேவ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் (52) மற்றும் செல்லத்துரை (54). உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையே இட பிரச்சினை இருந்துள்ளது.
நேற்று இடப்பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த செல்லத்துரை, அரிவாளால் ஐயப்பனை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த ஐயப்பனின் 17 வயது மகன் கத்தியால் குத்தியதில் செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். தென்காசி மாவட்ட எஸ்.பி. சாம்சன் மற்றும் வாசுதேவநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய சிறுவனை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலை சம்பவம் வாசுதேவநல்லுரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.