

சென்னை: மின்கட்டண பாக்கி, பான் அட்டை புதுப்பிப்பது என ஏமாற்றி, ஓடிபி எண்ணை பெற்று, வங்கி கணக்கில் இருந்து ரூ.3.30 லட்சம் மோசடி செய்த ஹரியாணாவை சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (62). மின்கட்டணம் செலுத்தவில்லை எனஇவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க ஓர் எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அதில் கூறப்பட் டிருந்தது.
செல்போனில் குறுஞ்செய்திகள்: அந்த எண்ணில் பேசிய ராம கிருஷ்ணன், பின்னர் தனது செல் போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.1.99 லட்சம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதேபோல, சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் மனைவிக்கு, பான் அட்டையை புதுப்பிக்குமாறு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதை நம்பி, ஓடிபி உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.1.30 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. புகார்களின் பேரில், இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
சிறையில் அடைப்பு: இந்நிலையில், இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் ஹரியாணா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் விரைந்து சென்று, மன்ஜித் சிங் (49), நாராயண் சிங் (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தெரியாத செல்போன் அழைப்பு களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஓடிபி எண் உட்பட எந்த தனிப்பட்ட தகவலையும் பகிரக் கூடாது என்று சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்தனர்.