Published : 13 Jan 2023 04:23 AM
Last Updated : 13 Jan 2023 04:23 AM

தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.3.5 லட்சத்தை இழந்த பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை

பிரதிநிதித்துவப் படம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பொறியாளர் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை ராமநாதபுரம் கீழத் தெருவை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் பாலன் (30), பொறியியல் பட்டதாரி. இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாரர். இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பாலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.

நேற்று பாலன் வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தட்டப்பாறை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பாலனின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்த போது, தற்கொலை செய்வதற்கு முன்பு அதிகாலை 5.30 மணிக்கு தனது நண்பர் ஒருவருக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த எஸ்எம்எஸ் நண்பருக்கு சென்று சேராத நிலையில் இருந்துள்ளது. அதில், தனது தந்தையின் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரம் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டேன். இதனால் எனது முடிவை நானே தேடிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது பாலனிடம் நேற்று முன்தினம் அவரது தந்தை ரூ.50 ஆயிரம் கொடுத்து அவரது வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் பாலன், அந்த பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை ஆன்லைன் ரம்மி விளையாடியதும்,

இதுபோல் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி ஏற்கெனவே சுமார் ரூ.3 லட்சம் வரை இழந்திருப்பதும் தெரியவந்தது. இதனால் விரக்தி அடைந்த பாலன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தட்டப்பாறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x