பொங்கல் தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காததால் முதல்வருக்கு மிரட்டல் விடுத்த டீ மாஸ்டர் கைது

பொங்கல் தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காததால் முதல்வருக்கு மிரட்டல் விடுத்த டீ மாஸ்டர் கைது
Updated on
1 min read

திருச்சி: பொங்கல் பரிசுத் தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காததால் அவசர தொலைபேசி எண் 100-ல் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த டீ மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு(அவசர தொலைபேசி எண் 100) கடந்த 9-ம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து பேசுவதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வேட்டி, சேலையும் சேர்த்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அவரைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து, மதுரை மாநகர காவல் துறைக்கு சென்னை போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மதுரை போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டர் ஜபருல்லா (39) என்பதும், அவர் தென்னூரிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வேட்டி,

சேலை இல்லை எனக் கூறி கடை ஊழியர்களிடம் தகராறு செய்ததும், அதன்பின் அவசர தொலைபேசி எண் 100-ஐ அழைத்து முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் ஜபருல்லாவைப்பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், மதுபோதையில் இருந்ததால் அப்படி பேசிவிட்டதாகக் கூறி போலீஸாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும், இது தொடர்பாக தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜபருல்லாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in