சென்னையில் கடந்த ஆண்டில் போதைப் பொருள் கடத்தியதாக 1,219 பேர் கைது

சென்னையில் கடந்த ஆண்டில் போதைப் பொருள் கடத்தியதாக 1,219 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க காவல் ஆணையர் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.

மேலும், போதைப் பொருள் கடத்தல் வலைப் பின்னலை உடைக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இத்தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டில் மட்டும் 1,219பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.12 கோடியே 70 லட்சம் மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2021-ல் 896 பேர் கைது செய்யப்பட்டு ரூ.7 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 2021-ல் 461 வழக்குகளும்,கடந்த ஆண்டில் 741 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுமட்டும் அல்லாமல் கடந்த 2021-ல் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. கடந்தாண்டில் இது 63 ஆக உயர்ந்தது.

சென்னையில் கடந்தாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யும்போது வண்ணாரப்பேட்டை காவல்மாவட்டத்தில் அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதிக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in