Published : 08 Jan 2023 04:33 AM
Last Updated : 08 Jan 2023 04:33 AM

சிறுமி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் தற்போது இளைஞராக உள்ள நபருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், குப்பம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரை 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில், வட மதுரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ராஜ்குமாருக்கு 2019-ல் திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் ராஜ்குமார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், சம்பவம் 2017-ல் நடந்துள்ளது. அப்போது மனுதாரருக்கு 16 வயது. ஆனால் அவரை வயதுக்கு வந்தவராகக் கருதி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் இல்லாமல் ஆதரவற்ற சூழலில் தவறு நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் சம்பவம் நடந்தபோது மைனராக இருந்த மனுதாரரை வயதுக்கு வந்தவராகக் கருதி விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது. விசாரணையின்போது தன்னை இளம் குற்றவாளியாகக் கருத வேண்டும் என மனுதாரர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு மனுதாரர் மேஜராகியுள்ளார். தற்போது அவருக்கு வயது 23. அவர் முதலில் கூர்நோக்கு இல்லத்திலும், பின்னர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். இது இளஞ்சிறார் சட்டம் 21-வது பிரிவுக்கு எதிரானது. அவருக்கு இளஞ்சிறார் சட்டப்படியே மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்க முடியும்.

அதே நேரத்தில் மனுதாரரை தண்டனை இல்லாமல் விடுதலை செய்யவும் முடியாது. நீதியை பாதுகாக்க வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உள்ளது. எனவே, மனுதாரருக்கு கொலைப் பிரிவில் மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. மனுதாரர் மீதமுள்ள தண்டனைக் காலத்தையும் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x