

திருப்பூர்: பல்லடம் ராயர்பாளையத்தை சேர்ந்தவர் பூஜா (19). அதே பகுதியில் வசித்து வருபவர் லோகேஷ் (22). இருவரும் ஒரே பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக இருவரும் பழகி வந்துள்ளனர்.
நேற்று மாலை பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் பனப்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி லோகேஷிடம் பூஜா வற்புறுத்தியுள்ளார். கோபம் அடைந்த லோகேஷ், பூஜாவை கல்லால் தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த பூஜாவை, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்தார். உடலில் தீப்பற்றிய நிலையில் பூஜா, அந்த பகுதியில் உள்ள சாலையில் ஓடினார்.
இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து இளம்பெண்ணை மீட்டனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூஜா, முதலுதவி சிகிச்சைக்குப்பின் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து லோகேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.