

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 16-வது குறுக்கு தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. 4 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் இருந்தவர்கள் 1-ம் தேதி அதிகாலையில், புத்தாண்டை கொண்டாடிவிட்டு தூங்கச் சென்றனர்.
அதன்பின், திடீரென சத்தம் கேட்டுள்ளது. உடனே குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் பைக்குகள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
குடியிருப்பில் சிசிடிவி கேமரா இல்லாததால் பைக்குகள் எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக நேற்று முன்தினம் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.