Published : 03 Jan 2023 04:20 AM
Last Updated : 03 Jan 2023 04:20 AM

கடலூர் தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசர் அடித்துக் கொலை: பீகார் மாநில தொழிலாளர்கள் 4 பேர் கைது

கடலூர்: கடலூரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில், பீகாரைச் சேர்ந்த சூப்பர்வைசரை அம்மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் அடித்துக் கொன்றனர். மேலும் ஒரு தொழிலாளி கவலைக் கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் முதுநகர் குடிகாட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (43) என்பவர் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். சஞ்சய் சிங் (32) என்பவர் இங்கு தொழிலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை முடிந்து, சக தொழிலாளர்களுடன் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த மர்மக் கும்பல் ஒன்று, திடீரென சஞ்சய் குமார், சஞ்சய் சிங் ஆகியோரை கட்டையால் சரமாரியாக தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சஞ்சய் குமாரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். சஞ்சய் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உயிரிழந்த சஞ்சய்குமாருக்கும் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 4 பேர் கொண்ட கும்பலுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்தது தெரிந்தது. போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் காரைக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீஸார் அங்கு சென்று 4 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சவுத்ரி, ரவீந்தர் சவுத்ரி, சுனில் குமார், சோனு குமார் என்பது தெரிய வந்தது.

ரசாயன தொழிற்சாலையில் பணி செய்யும் போது சூப்பர்வைசர் சஞ்சய் குமார் இந்த 4 பேரிடமும் அதிகமாக வேலைவாங்கியதாகவும் இதனால் ஆத்திரத்தில் அவரை தாக்கியதாகவும், அதை தடுக்க வந்த சஞ்சய் சிங்கையும் தாக்கியதாவும் அவர்கள் தெரிவித்தனர். போலீஸார் 4 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x