Published : 29 Dec 2022 06:51 PM
Last Updated : 29 Dec 2022 06:51 PM

ரவுடி கொலை வழக்கு: 3 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை ஐகோர்ட் 

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: ஏரியா தகராறில் ரவுடியை கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்தரப் பதிவேடு குற்றவாளியான அவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது சகோதரியோடு சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஏரியா தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டார். இதில் படுகாயமைடந்த சத்தியராஜ், மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். பின்னர் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக விஜி என்பவர் சரணடைந்த நிலையில், அப்பன் ராஜ், வேலு ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஆறாவது கூடுதல் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.இந்த தண்டனையை எதிர்த்து 3 பேர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், பலியான சத்தியராஜின் சகோதிரி அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும் தங்களுக்கு எதிராக போதிய சாட்சிகள் இல்லை எனவும் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து சாட்சிகளையும் முறையாக ஆய்வு செய்தே கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. எனவே, அந்த தீர்ப்பில் தலையிட தேவையில்லை எனக் கூறி, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x