Last Updated : 27 Dec, 2022 11:42 PM

 

Published : 27 Dec 2022 11:42 PM
Last Updated : 27 Dec 2022 11:42 PM

மதுரை | கஞ்சாவிற்கு பதில் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரிப்பு? - மருந்தாளுநர் உட்பட இருவர் கைது

மதுரை: மதுரை மாநகரை கஞ்சா இல்லாத நகரமாக மாற்ற காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். போலீஸாரின் தீவிர நடவடிக்கையால் கஞ்சாவிற்கு பதில் அதிக போதை தரும் மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், காவல் துணை மோகன்ராஜ் மேற்பார்வையில் மதிச்சியம் காவல் ஆய்வாளர் சேதுமணிமாதவன் தலைமையிலான தனிப்படையினர் சந்தேகப்படும்படியான இளைஞர்களை கண்காணித்தனர். மதிச்சியம் பகுதியில் டிச., 26ம் தேதி ஆசாரித்தோப்பு சங்கு மகால் அருகே வைகை வடகரை ரோட்டில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரை போலீஸார் வழிமறித்தனர். வாகனத்தை நிறுத்திவிட்டு இருவர் தப்பிய நிலையில், ஒருவர் பிடிபட்டார்.

விசாரணையில், அவர் மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் வடுகாடுபட்டியைச் சேர்ந்த தமிழழகன் (19) என்றும், தப்பியவர்கள் அவரது நண்பர்களான விக்கிரமங்கலம் தினேஷ், கவாஸ்கர் என்ற வெள்ளையன் என தெரிந்தது. தமிழழகனிடம் விசாரித்தபோது, மருந்தாளுநரான தினேஷிற்கு வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான மதுரை அண்ணாநகர் முத்துராமலிங்கத்தேவர் தெருவைச் சேர்ந்த மருந்தாளுநர் முரளிராஜ் (27) என்பவர் மூலம் தூக்கத்திற்கு பயன்படும் மாத்திரைகள், வலி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி அதிக லாபத்திற்கு விற்பது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து முரளிராஜை போலீஸார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே மெடிக்கல் வைத்திருந்திருந்த இவர், மருந்து விற்பனையாளர்களின் தொடர்பை பயன்படுத்தி போதை தரக்கூடிய மாத்திரைகளை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு மதுரை, சுற்றுவட்டார பகுதியில் இருந்து தேடிவரும் நபர்களுக்கு கூடுதல் விலையில் விற்றதாக தெரிவித்தார். அவரிடம் இருந்து 17,030 காலாவதியான மாத்திரைகள், 210 போதை மருந்து (Apikyf-Dx-100 ML) பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைமறைவான தினேசை தனிப்படையினர் தேடுகின்றனர். இதனிடையே மதுரை நகரில் கஞ்சாவுக்கு பதில் போதை அளிக்கும் மாத்திரைகள் விற்பனை தலை தூக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். போதை மாத்திரைகள் புழக்கத்தை தடுக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x