Published : 27 Dec 2022 10:43 AM
Last Updated : 27 Dec 2022 10:43 AM

குஜராத் | மகளின் ஆபாச வீடியோவை பரப்பியவர்களை தட்டிக்கேட்ட பிஎஸ்எஃப் வீரர் படுகொலை; 7 பேர் கைது

சூரத்: குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் தனது மகளின் ஆபாச வீடியோவை இணையத்தில் பரப்பியதை தட்டிக்கேட்ட எல்லைப்பாதுகாப்பு படை வீரரை அடித்துக் கொலை செய்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லைப்பாதுகாப்புப்படை வீரர், மெல்ஜிபாய் வகேலா. இவர் தனது மகளின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த 15 வயது சிறுவனிடம் அதுகுறித்து விசாரிப்பதற்காக அவனது கிராமான சக்லாசிக்குச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து சிறுவனிடம் விசாரிக்கும்போது அது வாக்குவாதத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர், வகேலாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வகேலா உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சக்லாசி போலீஸார் சம்பவம் தொடர்பாக, 7 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நாடியாடின் டிஎஸ்பி வி.ஆர்.பாஜ்பாய் கூறுகையில், "வகேலா, அவரது மகன் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் வீட்டிற்கு சென்று வீடியோ தொடர்பாக விசாரித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை, மாமா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பிஎஸ்எஃப் வீரரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்" என்று தெரிவித்தார்.

சம்பவம் குறித்து பிஎஸ்எஃப் வீரரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சக்லாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து, 7 பேரை கைது செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில், கொலை செய்யப்பட்டவரின் மகளும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறுவனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அவர்களுக்குள் உறவு இருந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் டிச.24ம் தேதி நடந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x