

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.
தேனி சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் 10 பேர் சபரிமலைக்கு காரில் சென்று தரிசனம் முடித்து இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் குமுளி மலைச்சாலையில் உள்ள இரைச்சல் பாலம் அருகே வந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டிலிருந்து விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து வந்த தமிழக - கேரள மாநில போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்து காரை மீட்டனர். கார் முல்லைப் பெரியாறு நீர் செல்லும் ராட்சத குழாய்கள் இடையே சிக்கியிருந்ததால் மிகுந்த போராட்டத்துக்கு இடையே காரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சம்பவ இடத்திலிருந்து 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது. விபத்தில் படுகாயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.