தி.மலை | மாணவியின் கன்னத்தில் சூடு வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்: மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை

தீக்காயத்துடன் மாணவி கவுதமி.  அடுத்த படம்: தலைமை ஆசிரியை உஷா ராணி.
தீக்காயத்துடன் மாணவி கவுதமி. அடுத்த படம்: தலைமை ஆசிரியை உஷா ராணி.
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மாணவியின் கன்னத்தில் தீக்குச்சியை பற்ற வைத்து சூடு வைத்த தலைமை ஆசிரியை நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த கிடாதாங்கல் கிராமத்தில் வசிப்பவர் முனியன். இவரது மகள் கவுதமி(9). இவர், மங்கலம் அருகே மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரியாக படிக்கவில்லை எனக் கூறி, அவரது கன்னத்தில் தீக்குச்சியை பற்ற வைத்து தலைமை ஆசிரியை உஷா ராணி ‘சூடு’ வைத்துள்ளார்.

இதனால், மாணவியின் கன்னத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியை உஷா ராணியிடம், பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கேள்வி எழுப்பியும் உரிய பதில் அளிக்கவில்லை. இது குறித்து மாணவியின் தாயார் மணிமேகலை நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகளிடம் கல்வித் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து, தலைமை ஆசிரியை உஷா ராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் (தொடக்க பள்ளி) நேற்று உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in