

சென்னை: மெரினாவில் கத்தி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். மயிலாப்பூர் டுமீல் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஜா(37). இவர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் இடையில் உள்ள லூப் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு நபர்கள், ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி ரோஜாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த பணம், நகையைக் கேட்டனர்.
அவர் கொடுக்க மறுக்கவே, அந்த நபர்கள் ரோஜாவை கத்தியால் தாக்கி, பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதற்கிடையே ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், விரைந்து வந்தனர். அவர்களிடம் ரோஜா சம்பவத்தைக் கூறினார்.
உடனே போலீஸார் இருவரையும் விரட்டிச் சென்றனர். இதில் கடலுக்குள் குதித்து தப்ப முயன்ற ஒருவரை விரட்டிச் சென்று, பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அயனாவரம் பில்கிங்டன் சாலையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (22) என்பதும், தப்பியோடியது அவரது கூட்டாளி பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராயன் தெருவைச் சேர்ந்தராம்பிரசாத் (23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார், சந்தோஷ்குமாரை உடனே கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து,விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய ராம் பிரசாத்தை நேற்று மாலை கைது செய்தனர்.