முனுசாமி.
முனுசாமி.

இரும்புக்கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்: திருட்டு செல்போன்களை விற்பனை செய்ததை போலீஸாரிடம் தெரிவித்ததால் கொலை

Published on

சென்னை: சென்னை புளியந்தோப்பு ஏ.எம்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (37). இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேஅல்லிக்குளம் வணிக வளாகத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து கொலையாளிகள் யார் என்பதை கண்டறியும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகைநிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கினர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட டவுன் போலீஸார் நேற்று அதிகாலை வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்தஆட்டோவை மடக்கினர். ஆட்டோவில் 5 பேர் இருந்தனர். அவர்கள்சென்னை கொடுங்கையூர் அஷ்ரப்அலி (28), வியாசர்பாடி மணிகண்டன்(27), புளியந்தோப்பு அப்பாஸ் (28), சூளை கிஷோர் (29), அல்லிக்குளம் ஆபிரகாம் (19) என்பதும்,அல்லிக்குளம் வணிக வளாகத்தில் முனுசாமியை கொலை செய்துவிட்டு தப்பியது இவர்கள்தான் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரும் பெரியமேடு காவல் நிலையஆய்வாளர் தீபக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அல்லிக்குளத்தில் உள்ள செல்போன் கடையில் அஷ்ரப் அலி, அப்பாஸ் ஆகியோர் வேலைபார்த்துள்ளனர். அவர்கள் திருட்டுசெல்போன்களை வாங்கி விற்பதுபற்றி முனுசாமி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். எனவே,இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் முனுசாமி கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட முனுசாமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அவரது மகன்களில் ஒருவரது பிறந்தநாள் ஆகும்.மகன் பிறந்த நாளில் முனுசாமி கொலை செய்யப்பட்டுள்ளார். இது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in