

மானாமதுரை: மானாமதுரையில் திருமணமான 6 மாதங்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், அரசு மருத்துவ மனை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதில் எஸ்ஐ-க்கு காயம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முத்து மகள் ஜெபஸ்லீ (23). இவருக்கும் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலையைச் சேர்ந்த திரவியம் மகன் ஜெகதீஷுக்கும் (26) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் மானாமதுரை பர்மா காலனியில் வசித்து வந்தனர். ஜெகதீஷ் முதுகுளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பப் பிரச்சினையில் ஜெபஸ்லீ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஜெபஸ்லீயின் உடல்பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு வந்த ஜெபஸ்லீ உறவினர்கள், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மானாமதுரை அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஜெபஸ்லீயின் கணவர் ஜெகதீஷை தாக்க முயன்றனர். அப்போது மருத்துவமனை கண்ணாடி உடைந்தது. இதில் எஸ்ஐ அருள்ராஜ் கையில் காயம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் கோட்டாட்சியர் சுகிதா, வட்டாட்சியர் சாந்தி மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு ஜெபஸ்லீ உடலை பெற்று சென்ற னர். ஜெயஸ்லீயை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.