Published : 17 Nov 2022 07:36 AM
Last Updated : 17 Nov 2022 07:36 AM

தாம்பரம் | ராபின்ஹூட் கதாபாத்திரம் பாணியில் ஆதரவற்றோருக்கு உதவ திருடியவர் கைது

தாம்பரம்: ராபின்ஹூட் கதாபாத்திரம் பாணியில் திருடிய பணத்தில் ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர், சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன். 2 நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவிட்டு கடந்த 4-ம் தேதி வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது. புகாரின்பேரில் பீர்க்கங்காரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தனி நபர் ஒருவர் வீட்டை நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்து உள்ளே சென்று திருடிச் சென்றது தெரியவந்தது.

மாதம் ஒரு வீடு... அந்த நபரின் அங்க அடையாளங்களைக் வைத்துப் பார்த்தபோது சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் வசிக்கும் அன்புராஜ் என்கின்ற அப்பு (33) என்பது தெரியவந்தது. அதன்பிறகு போலீஸார் எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கண்காணித்து அப்புவை கைது செய்தனர். விசாரணையில் பெருங்களத்தூரில் மட்டும் மாதம் ஒரு வீடு என கணக்கு வைத்து 4 வீடுகளில் திருடிச் சென்றது தெரியவந்தது.

11 பவுன் நகைகள் பறிமுதல்: திருடிய நகைகள் குறித்து கேட்டபோது அந்த நகைகளை விற்று சாலையோரம் மற்றும் ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இதே பாணியில் திருடி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவரிடம் இருந்து 11 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணக்காரர்களிடம் இருந்து திருடி இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உதவும் ராபின்ஹூட் கதாபாத்திரத்தை நாம் கேள்விபட்டிருப்போம். கதைகளிலும் சினிமாவிலும் பார்த்திருப்போம். அதுபோல அப்புவும் ஒரு ராபின்ஹூட் பாணியில் திருடி சாலையோர மக்களுக்கு உதவி இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x